புதன், 27 ஜனவரி, 2016

நஞ்சில்லா விவசாயம்… சாதித்த சிக்கிம்…


இந்தியாவில் முழுக்க, முழுக்க இயற்கை விவசாயத்திற்கு மாறிய முதல் மாநிலமாகியிருக்கிறது சிக்கிம். 2003ஆம் ஆண்டில் எடுத்த உறுதிமொழியை தடை பல கடந்து நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார் அம்மாநில முதலமைச்சர் பவான் சாம்லிங். வெறும் 6 லட்சம் மக்கள் தொகையே கொண்ட மலைப்பிரதேசத்து சிறிய மாநிலமான சிக்கிமில் உள்ள 75 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலத்தில் இன்று ஒரு துளி கூட ரசாயன உரம், நச்சு பூச்சிக்கொல்லிகள் கிடையாது.



ரசாயன உரங்களால் தின்று தீர்த்த நம் மண்ணில் தனிநபர் ஒருவரே இயற்கை விவசாயத்திற்கு மாறுவது அவ்வளவு சுலபமில்லை என்ற நிலையில் ஒரு மாநிலமே மாறியிருக்கிறது என்றால் இது உண்மையிலேயே அளப்பறிய சாதனைதான்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை ரகசியமாக அறிமுகப்படுத்தும் மத்திய அரசு, மாநில அரசுகளுடன் கைகோர்த்து வீரிய ரக (ஹைபிரீட்) விதைகளை நம் மண்ணில் விதைத்துக்கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், நம் மண்ணைக் கெடுத்து பல லட்சம் கோடிகளை சுருட்டும் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி நிறுவனங்கள் என எட்டுத்திக்கும் அசுரர்கள் நிற்க நடுவில் சிற்றெறும்பாய் ஒரு மாநிலம் இயற்கை விவசாயத்திற்கு மாறியிருக்கிறது என்றால் அது சாதாரண நிகழ்வா என்ன?
இதற்கு விதை போட்டது முதல்வர் பவான் சாம்லிங். 1994ஆம் ஆண்டு முதல்வராக அரியணை ஏறியவர் தொடர்ந்து 5 தேர்தல்களில் வென்று இன்று வரை முதல்வராக நீடிக்கிறார் என்பதில் இருந்தே இவர் மீது மக்கள் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என தெரிந்து கொள்ளலாம். இயற்கையை அளிக்காமல் தற்சார்புள்ள உணவு உற்பத்திக்காக இயற்கை விவசாயத்திற்கு மாநிலத்தை முழுமையாக மாற்ற வேண்டும் என 2003இல் திட்டம் போட்டார் பவான் சாம்லிங்.



இது ஏதோ அரசு மட்டுமே முன்நின்று நிறைவேற்றும் திட்டம் அல்ல என பவான் சாம்லிங்கிற்கு நன்றாகவே தெரியும். முதலில் விவசாயிகளின் மனநிலையில் மாற்றம் வேண்டும் என்பதை புரிந்துகொண்டிருந்தார் அவர். முதலில் விவசாயிகளை சந்தித்து ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளால் நிலம் எப்படி கெட்டுபோய் இருக்கிறது, நம் நிலத்தை நாசமாக்குவதில் நாமே எப்படி காரணமாக இருக்கிறோம் என அரசு அதிகாரிகளே கூட்டம் போட்டு விளக்கினார்கள். பள்ளி பாடத்திட்டத்தில் இயற்கை விவசாயத்தை பற்றிய பாடம் சேர்க்கப்பட்டது. இயற்கை விவசாயத்திற்கான கட்டாய பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
பாரம்பரிய விவசாய முறையை நவீன உழவர்களுக்கு தூசி தட்டி அறிமுகப்படுத்தியது அரசு. இயற்கை முறையில் உரங்களை தயாரிப்பது எப்படி, மாட்டு சாணம், மூத்திரத்தை உரமாக பயன்படுத்துவது எப்படி என அனுபவம்மிக்க விவசாயிகளே அரசோடு கைகோத்து பயிற்சியளித்தார்கள். இது மண்ணின் வளத்தை மட்டும் மீட்டெடுக்கவில்லை. உரம், பூச்சிக்கொல்லிக்கு காந்தி நோட்டுகளை எண்ணிக்கொடுக்காமல் நமக்கு கிடைக்கும் சாணம், இலைகள், கழிவுகளையே எப்படி பயன்படுத்துவது என்ற தற்சார்பை ஒவ்வொரு விவசாயிக்கும் அளித்தது.


படிப்படியாக விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்கு மாற்றிக்கொண்டிருந்த சிக்கிம் அரசு எடுத்த மற்றொரு தைரியமான முடிவு ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் கொள்முதலை நிறுத்தியதுதான். அதற்கு கொடுத்துவந்த மானியங்களையும் அதிரடியாக ரத்து செய்தது அரசு. சுமார் 67 நாடுகளில் தடை செய்யப்பட்ட உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் அனுமதிக்கப்பட்டுள்ள இந்தியாவில் இப்படி ஒரு முடிவை மாநில அரசாங்கம் எடுப்பது என்பது சாதாரணமல்ல.
அதனால்தான் இன்று தமிழ்நாட்டில் யூரியா கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு என்று பத்திரிகையில் செய்தி வரும்போது, சிக்கிமில் யூரியா, ரசாயன பூச்சிக்கொல்லி கடத்தியவர்கள் கைது என செய்தி வருகிறது. ஆம், ரசாயன உரம், பூச்கிக்கொல்லிகளை சிக்கிம் மாநிலத்திற்குள் கொண்டுவருவதும், பயன்படுத்துவதும் இப்போது சட்டப்படியான குற்றம். ரசாயன உரங்கள் மாநிலத்திற்குள் நுழைவதை தடுப்பதற்காகவே எல்லையில் இரு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

     பசுமைப் புரட்சியின்போது ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளை எப்படி தலையில் சுமந்துகொண்டு சென்று கடைக்கோடி விவசாயியும் நச்சு விவசாயத்திற்கு மாற்றினார்களோ, அதே போன்ற ஒவ்வொரு விவசாயியையும் நேரில் சென்று பார்த்து பயிற்சி அளித்து இயற்கை விவசாயத்திற்கு மாற்றினார்கள் அதிகாரிகள். இயற்கை விவசாயத்திற்கு உடனே தடம்மாறுவது சுலபமில்லை என்பதால் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையும் வழங்கியது சிக்கிம் அரசு.
இயற்கை முறையில் விளைவித்த முட்டைக்கோஸ், முள்ளங்கி, கேரட், ஏலக்காய் உள்ளிட்ட விளைபொருட்களுக்கு சரியான சந்தையையும் அரசாங்கமே ஏற்படுத்திக் கொடுத்ததால் விவசாயிகள் தைரியமாக இயற்கை விவசாயத்திற்கு திரும்பினார்கள். இயற்கை விவசாயத்திற்கு மாறிய நிலங்களுக்கு படிப்படியாக சான்றிதழ் வழங்கியது அரசாங்கம்.

இயற்கை உரங்களால் மண் வளம் பெற்று விளைச்சலும் பெருக விவசாயிகள் நம்பிக்கை பெற்றனர். மற்றொரு புறம் அனைத்து சந்தையிலும் இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகள் விற்பனையானதால் ஒரேவிதமான நல்ல விலை கிடைத்தது. பெயருக்கு திட்டத்தை அறிவித்து விவசாயிகளை பாதியில் கைவிடாமல் ஆரம்பம் முதல் இறுதி வரை கூடவே இருந்து இயற்கை விவசாயத்திற்கு மாற முழு ஒத்துழைப்பு அளித்தது அரசு.
திட்டமிட்டபடியே சரியாக 12 ஆண்டுகளில் மாநிலம் முழுவதையும் இயற்கை விவசாயத்திற்கு மாற்றிவிட்டார் பவான் சாம்லிங். கடந்த மாதம் சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் நடந்த விழாவில் இதை பெருமையாக அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. ஒவ்வொரு மாநிலமும் ஒரு மாவட்டம் அல்லது ஒரு வட்டத்திலாவது இயற்கை விவசாயத்தை சோதனை முறையில் முயன்று பார்க்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோளும் வைத்தார்.
இன்று சிக்கிமில் உள்ள 75 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலத்திலும் இயற்கை விவசாயம்தான் நடக்கிறது. இதனால் சுமார் இயற்கை முறையில் சுமார் 8 லட்சம் டன் காய்கறிகள், உணவு தானியங்கள் விளைவிக்கப்படுகின்றன. இந்தியா முழுவதுமே வெறும் 12.4 லட்சம் டன் காய்கறிகள், உணவு தானியங்கள்தான் இயற்கை முறையில் விளைவிக்கப்படுகின்றன என்பதில்  இருந்தே சிக்கிமின் முக்கியத்துவம் நமக்கு தெரியும். சுருங்கச் சொல்ல வேண்டும் என்றால் நாட்டின் இயற்கை முறையிலான விளைபொருட்களில் சுமார் 65 விழுக்காடு சிக்கிமில்தான் விளைகிறது.


முதல்வர் பவான் சாம்லிங் இதோடு நின்றுவிடவில்லை. 300 மெட்ரிக் டன் இயற்கை உரம் தயாரிக்கும் ஒரு ஆலையை நிறுவ திட்டமிட்டுள்ளார். ஒவ்வொரு ஊராட்சியிலும் காய்கறி கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் அமைப்பை நிறுவவும் முடிவு செய்துள்ளார்.

அதெல்லாம் இருக்கட்டும் நாம் என்ன செய்கிறோம். தமிழகத்தில் இருந்து வரும் காய்கறிகளில் பூச்சிக்கொல்லிகளின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என கேரளா தடை போட்டபோது அது அப்படி ஒன்றும் ஒரேயடியாக கொல்லும் விஷமாக இல்லை மெல்லக் கொல்லும் விஷம்தான் என்றரீதியில் அரசாங்கத்தின் துணையோடு பூச்சிக்கொல்லியின் தாக்கம் குறைவாகவே இருக்கிறது என பெருமையோடு சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
நம்மாழ்வார் சொல்வதுபோல விவசாயம் என்பது பொருளியல் சார்ந்தது என்பதை குடலியல் சார்ந்தது என்பதை அரசியல்வாதிகள் உணர வேண்டும். செய்வார்களா? நம் ஊரில் செய்வார்களா?